தஞ்சாவூர் அருகே தனியார் பஸ்சை வழிமறித்து கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது

2 months ago 10

தஞ்சாவூா், நவ.5: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மாசத்திரத்தை சேர்ந்தவர் மோகன் மகன் சதீஷ் (28). தனியார் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிபுரியும் தனியார் பேருந்து நேற்று முன்தினம் மாலை கும்பகோணத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டுச் சென்றது. பஸ் அய்யம்பேட்டை நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்தது. அப்போது பாபநாசம் அருகே உள்ள புரசைக்குடியை சேர்ந்த அஜித்குமார் (29) என்பவர் குழந்தையுடன் ஒரு பெண்ணை பஸ்சில் ஏற்றிவிட்டார். அப்போது திடீரென கண்டக்டர் சதீசுக்கும், அஜித்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரம் நடந்த வாக்குவாதம் முடிந்த பின்னர் பஸ் புறப்பட்டு சென்றது.

இதையடுத்து அஜித்குமார் சக்கராப்பள்ளியை சேர்ந்த குலாம் தஸ்தஹிர் (25) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு பஸ்சை வேகமாக விரட்டி சென்றார். தஞ்சை அருகே வயலூர் பகுதியில் வைத்து பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். இதையடுத்து கண்டக்டர் சதீஷை தகாத வார்த்தையால் திட்டி கையால் சரமாரியாக தாக்கினர். இதில் சதீஷ் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கண்டக்டர் சதீஷ் தஞ்சாவூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமார், குலாம் தஸ்தஹிர் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓடும் பஸ்சை மறித்து கண்டக்டரை தாக்கிய சம்பவம் சி.சி.டி.வி காட்சியில் பதிவாகி வைரலானதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தஞ்சாவூர் அருகே தனியார் பஸ்சை வழிமறித்து கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article