
புலவாயோ,
தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 24 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த போதிலும் அடுத்து வந்த பொறுப்பு கேப்டன் வியான் முல்டெர் ஜிம்பாப்வே பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். அவருக்கு டேவிட் பெடிங்காம் (82 ரன்), டிரே பிரிட்டோரியஸ் (78 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தனர். அபாரமாக ஆடிய முல்டெர் 214 பந்துகளில் தனது முதலாவது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். அதன் பிறகும் அவரது ரன்வேட்டை நீடித்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 465 ரன்கள் அடித்திருந்தது. முல்டெர் 264 ரன்களுடனும் (259 பந்து, 34 பவுண்டரி, 3 சிக்சர்), டிவால்ட் பிரேவிஸ் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் பிரெவிஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கைல் வெர்ரைன் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முல்டர் முச்சத்தம் அடித்து அசத்தியுள்ளார். கேஷவ் மகராஜ் விலகிய சூழலில் கேப்டன் பொறுப்பை ஏற்ற முல்டர் முதல் போட்டியிலேயே முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே அதிக ரன் குவித்த வீரர் என்ற விராட் கோலியின் (256 ரன்கள்) சாதனையை தகர்த்து வியான் முல்டர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. வியான் முல்டர் - 300* ரன்கள்
2. விராட் கோலி - 256 ரன்கள்
3. கிரகாம் டவுலிங் - 244 ரன்கள்
4. கிரெக் சேப்பல் - 232 ரன்கள்
5. அலஸ்டயர் குக் - 212 ரன்கள்