
புது டெல்லி,
பீகாரில் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தேர்தல் கமிஷன், அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொண்டு உள்ளது. பொதுவாக தேர்தல் கமிஷன் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களின் 1-ந் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு ஆண்டுக்கு 4 முறை சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி என்பது முற்றிலும் வேறுபாடானது. இதன் மூலம் வாக்காளர் பட்டியல் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும் ஒரு விரிவான நடவடிக்கையாகும். பீகாரில் இந்த பணியில் 98,498 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடு்பட்டு உள்ளனர். இதுதவிர ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களும் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பணிக்காக அவர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகின்றனர். அதோடு வாக்காளர்களுக்கு படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதோடு மிக முக்கியமாக 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒருவேளை இந்த ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவர்களது பெற்றோர்களின் குடியிருப்பு ஆவணங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதனையும் வழங்காவிட்டால் வாக்காளர் பெயரை நீக்குவது குறித்து அந்தப்பகுதி வாக்குச்சாவடி அலுவலர் முடிவு செய்வார்.
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு ஒருபுறம் ஆதரவு இருந்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த நடவடிக்கை லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமையை பறிக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்து உள்ளது. இந்த சூழ்நிலையில் தேர்தல் கமிஷனும், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே தனியார் அமைப்பு ஒன்று சிறப்பு தீவிர திருத்த முகாமை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுதான்சு துலியா, ஜோய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜரானார். அப்போது, பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு இடைக் கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
அதே நேரம் இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக் கொண்டது. வருகிற 10-ந்தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மனுக்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு கபில்சிபல் வலியுறுத்தினார். வியாழக்கிழமை நாங்கள் அதை பரிசீலிப்போம் என்று நீதிபதி துலியா கூறினார்.