
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியாவுக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஜெய்ஸ்வால் (0), கருண் நாயர் (14 ரன்), கேப்டன் சுப்மன் கில் (6 ரன்), விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட ஆகாஷ் தீப் (1 ரன்) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.
4-வது நாள் முடிவில் இந்திய அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் உள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன் தேவை. அதே சமயம் இங்கிலாந்து வெற்றிக்கு 6 விக்கெட் தேவை. இத்தகைய பரபரப்பான சூழலில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்த தொடரில் சுப்மன் கில் இதுவரை 607 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ராகுல் டிராவிட் 602 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் - 607 ரன்கள்
2. ராகுல் டிராவிட் - 602 ரன்கள்
3. விராட் கோலி - 593 ரன்கள்
4. சுனில் கவாஸ்கர் - 542 ரன்கள்
5. ராகுல் டிராவிட் - 461 ரன்கள்