'டாஸ்மாக் வழக்கில் அரசியலமைப்பு சட்டத்தை அமலாக்கத்துறை மீறியுள்ளது' - என்.ஆர்.இளங்கோ

3 hours ago 2

சென்னை,

டாஸ்மாக் நிறுவனத்தின் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணபரிவர்த்தனையின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் 6 முதல் 8-ந்தேதி வரை சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது, அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் 23-ந்தேதி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

டாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என கேள்வி எழுப்பி அமலாக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்தனர். மேலும், அமலாக்கத்துறையானது அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப்பை சிதைத்துள்ளது என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை அரசியலமைப்பை மீறியுள்ளது என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது;-

"டாஸ்மாக் வழக்கில் நடைமுறைச் சட்டம், அரசியலமைப்பு சட்டத்தை அமலாக்கத்துறை மீறியுள்ளது. அரசியல்வாதிகளைப் போல் அமலாக்கத்துறை செயல்பட்டது. வழக்கில் தொடர்புடைய நபர்களை விசாரிக்காமல் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியதை கண்டிக்கிறோம்.

பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதா? டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்காளத்தில் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பொருந்தும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Read Entire Article