சென்னை: சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்ட நிலையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனை அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மேலும், சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.