சென்னை: டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து புதிய சட்டத்தின்படி 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை அரசு அமைத்தது. சென்னை பெருங்குடியில் செயல்பட கூடிய டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் சந்தோஷ் குமார். இவரது பணிக்காலம் கடந்த ஏப்ரல் 8ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த குழுவிற்கு தலைவராக முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணை வேந்தர்கள் சச்சிதானந்தம், விஜயகுமார் தேடுதல் குழுவில் உள்ளனர். இதை தொடர்ந்து துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவிடம் 6 வார காலத்திற்குள் தகுதியான பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அதிலிருந்து துணைவேந்தர் பட்டியலை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வாசுகி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தீனபந்து உள்ளிட்ட 5 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணைவேந்தர் நியமன அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வந்த பிறகு முதல்முறையாக தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.