சென்னை: ‘அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது’ என தமிழக அரசு தரப்பில் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், “எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எனவே, இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்,” என்று ஞானசேகரன் தரப்பில் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.