
சென்னை,
தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் ஆக்கப் பணிகள் குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலாவதாக, ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் போப் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது..
இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான்..! இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க வேண்டும்!
தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்!
பா.ஜ.க. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.
அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும்.
வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை!
பவள விழாவைக் கொண்டாடிய கழகம், ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கக் காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன்.
கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய தீர்மானங்கள் என்னென்ன..?
இரங்கல் தீர்மானங்கள்
* ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பகல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் அனைவருக்கும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
* முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கும் இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 1
திராவிட மாடல் அரசின் ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் - மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற - இந்தியாவிற்கே ரோல் மாடலாகச் செயல்படும் கழகத் தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் அவர்களுக்குப் பாராட்டு.
இந்தியத் துணைக் கண்டத்தில் - மக்கள் நலன் போற்றும் வகையில், மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் தீரத்துடன், சமூகநீதியைப் பாதுகாத்து, சட்டமன்ற மாண்பினை நிலைநாட்டி, ஜனநாயகக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் அரசாகவும், மத்திய பா.ஜ.க அரசின் எதேச்சாதிகாரப் போக்கிலிருந்து - அரசியல்சட்டம் தந்துள்ள கூட்டாட்சிக் கருத்தியலைப் பாதுகாக்கும் முதன்மையான மாநில அரசாகவும் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து - ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசின் - மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற முதல்-அமைச்சராகவும் - இந்தியாவிற்கே ரோல் மாடலாக - தமிழ்நாட்டின் தனிப் பெருந்தலைவராகவும் திகழும் கழகத் தலைவர், முதல்-அமைச்சர் அவர்களுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தனது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி - மத்திய பா.ஜ.க. அரசிடம் தொடர்ந்து குரல் எழுப்பி - சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு ம்த்திய அரசுக்குத்தான் உள்ளது என்பதை நாட்டு மக்களுக்கும் - மத்திய அரசுக்கும் உணர்த்தி - தற்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பை பெற்றிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக கவர்னரின் கையெழுத்தின்றி சுப்ரீம்கோர்ட்டே ஒப்புதல் அளித்துச் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தனது சட்டப் போராட்டம் மூலம் பெற்று, கவர்னர் அடாவடியாக நிறைவேற்ற மறுத்த பத்து மசோதாக்களைச் சட்டமாக்கி சகாப்தம் படைத்து, "சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கே" - "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே - நிச்சயமாக ஆளுநருக்கு இல்லை" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது மட்டுமின்றி, இந்தத் தீர்ப்பின் மூலம், இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
அதோடு, வரலாற்றில் மீண்டும் மாநில சுயாட்சிக்காக மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவினை நியமித்துள்ள கழகத் தலைவரும் - முதல்-அமைச்சர்ருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, மாவட்ட செயலாளர்களின் இந்த கூட்டம் உவகையுடனும் - பெருமை பொங்கவும் பாராட்டுதலைப் பதிவு செய்து கொள்கிறது.
மேலும், ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் நாயகர் முதல்-அமைச்சர் அவர்களுக்குத் துணையாகச் செயலாற்றி வரும் மாண்புமிகு துணை முதல்-அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்; அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் இம்மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வாழ்த்தும் - பாராட்டும் - நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 2
"நாடு போற்றும் நான்காண்டு
தொடரட்டும் பல்லாண்டு!"
சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்
முதல்-அமைச்சர் அவர்கள், நடைபெற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், அவரது உள்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் தெரிவித்தபடி, வளர்ச்சி சார்ந்த எந்த ஓர் இலக்காக இருந்தாலும் அதில் இந்திய ஒன்றியத்தின் சராசரியைவிட தமிழ்நாடு கூடுதலான அளவில் முன்னேறியிருக்கிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 விழுக்காடு என்றால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 விழுக்காடு; தேசிய சராசரியான 2.06 லட்சம் என்பதைவிட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 3.58 லட்சம் என 1.74 மடங்கு அதிகரிப்பு; தமிழ்நாட்டின் உயர்கல்விச் சேர்க்கை விகிதம் 47 விழுக்காடு; நிலையான வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது இடம்; சமூக முன்னேற்றக் குறியீட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்; வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் வெறும் 1.43விழுக்காடாகக் குறைவு; மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2.25 கோடி மக்கள் பயன்; இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு மருத்துமனைகளில் அதிகமான படுக்கைகள்; இந்தியாவிலேயே அதிகத் தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம்; 5.35 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்றதில் நாட்டிலேயே இரண்டாவது இடம்; ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதில் நாட்டிலேயே மூன்றாவது இடம்; சூரிய சக்தியில் நான்காவது இடம், ஸ்டார்ட்-அப் தரவரிசைப் பட்டியலில் அ.தி.மு.க. ஆட்சியில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2022-இல் முதலிடம், ஏற்றுமதித் தயார் நிலைக் குறியீட்டில் முதலிடம்; மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலம்; தோல் பொருட்கள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் முதன்மை மாநிலம்; நாட்டிலேயே காவல்துறையில் அதிக பெண் அதிகாரிகள் பணிபுரியும் மாநிலம்; அதுமட்டுமல்ல - சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று திராவிட மாடல் அரசின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் அடுக்கடுக்கான சாதனைகளால் தமிழ்நாடு இன்றைக்கு முன்னிலையில் இருக்கிறது!
அதுமட்டுமல்ல, மக்களை முன்னேற்றும் முத்திரைத் திட்டங்களான 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்', 'மகளிர் விடியல் பயணத் திட்டம்', 'முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்', 'புதுமைப்பெண் திட்டம்', 'தமிழ் புதல்வன் திட்டம்', 'நான் முதல்வன் திட்டம்', 'அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்', 'இல்லம் தேடிக் கல்வி', 'மக்களைத் தேடி மருத்துவம்' என அனைத்துத் திட்டங்களும் - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் - தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும் முன்னோடியாகத் திகழ்வதை மற்ற மாநிலங்கள்கூட இன்று திரும்பிப் பார்க்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழக அரசின் இந்தச் சாதனைகளைப் பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் வரப்பெற்ற 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், 868 ஒன்றியங்கள் - 224 பகுதிகள் - 152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில் "நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு!" சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்திடுவதென மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் முடிவு செய்கிறது.
தீர்மானம் : 3
பவள விழா கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு - கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்பேரில் கூடல் மாநகரில் ஜூன் 1-ஆம் நாள் கூடுகிறது!
நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தில், 75 ஆண்டுகளைக் கடந்து தமிழ் மக்களுக்கான சமுதாய - அரசியல் பணிகளைச் சளைக்காமல் மேற்கொண்டு, நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத தேசிய சக்தியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் திகழ்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில் நின்று தமிழ்நாட்டின் நலன் காத்து வருவதுடன் - இன்று அகில இந்திய அரசியலில் நம் கழகத் தலைவரின் கருத்து என்ன என்ற எதிர்பார்ப்பு ஓங்கி நிற்கிறது. பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நம் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகவும், சமத்துவம், சமூகநீதி, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் காக்கும் மாபெரும் இயக்கமாக முன்வரிசையில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுக் கூட்டம் நம் ஒப்பற்ற கழகத் தலைவர் அறிவுறுத்தலின்படி, வருகின்ற ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறும் என்று இம்மாவட்டச் கழக செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் : 4
அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் மத்திய பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலுக்குக் கண்டனம்!
மக்கள் மன்றத்திலும் - சட்டத்தின் துணைக் கொண்டும்; தி.மு.க. எதிர்கொள்ளும்!
நீதித்துறை உள்ளிட்ட அனைத்துத் தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளிலும் அத்துமீறிக் குறுக்கிட்டு - அந்த அமைப்புகளின் சுதந்திரத்தைப் பறித்து வருவதோடு - தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மட்டுமே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ரெய்டுக்கும், சோதனைகளுக்கும் இலக்காகும் வகையில் அதிகார அத்துமீறல் செய்து - அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை உருவாக்கி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற நடுநிலை தவறாது செயல்பட வேண்டிய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதன் விளைவாக இன்று ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம்கோர்ட்டின் கண்டனத்திற்கு இந்த அமைப்புகளை ஆளாக்கி, அ.தி.மு.க. போன்ற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அமைக்க மத்திய பா.ஜ.க. அரசு இந்த அமைப்புகளை ஈடுபடுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட நடவடிக்கையை "பழிவாங்கும் நடவடிக்கை" எனக் கூறிய அமலாக்கத்துறையைப் பார்த்து; இப்போது டெல்லி ஐகோர்ட்டும், மாண்பமை சுப்ரீம்கோர்ட்டும் அந்த அமைப்புகளில் நடக்கும் ஊழல்களை கண்டித்துக் கொண்டு இருப்பதையும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய பா.ஜ.க. அரசு பயன்படுத்துவதை திராவிட முன்னேற்றக் கழகம் சட்டத்தின் துணைக் கொண்டு துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஏற்கெனவே கழகத் தலைவர் - மாண்புமிகு முதல்-அமைச்சர் அவர்கள் சொன்னபடி, அமித்ஷா அல்ல; எந்த ஷா வந்தாலும் - அவர்கள் எத்தனை பரிவாரங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து, நீதியை நிலைநாட்டிடவும் - மக்கள் மன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.