
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர்.
கடந்த மாதம் இருவரும் ஒரே காரில் சென்னை குடும்ப நல கோர்ட்டிற்கு வந்து பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல கோர்ட்டு நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரிய மனுவை செப்டம்பர் 25 தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய விசாரணைக்கு இருவரும் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.