
புதுடெல்லி,
கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் 3 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். சட்ட விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 7 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவடைந்த பின்னர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த சுப்ரீம்கோர்ட்டு, "பிரிவு 19-ன் படி இந்தியாவில் குடியேறுவதற்கான அடிப்படை உரிமை இந்தியர்களுக்கு மட்டுமே உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் கிடையாது. அகதிகளை எல்லா இடங்களில் இருந்தும் வரவேற்க முடியாது. நீங்கள் வேறு நாட்டிற்கு செல்லுங்கள்." என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.