ஜாமீன் பெற்றும் சிறையிலிருந்து வெளியில் வரமுடியாத கைதிகளை விரைந்து வெளியே அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு

2 months ago 5

சென்னை: நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கிய பிறகும் வௌியே வரமுடியாத கைதிகள் சிறைகளில் இருந்து விரைந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 800க்கும் மேற்பட்டவர்கள் ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ், தமிழகம் முழுவதும் 153 விசாரணைக் கைதிகளும் 22 தண்டனைக் கைதிகளும் ஜாமீன் கிடைத்தும் பிணை செலுத்த முடியாததால் வெளிவர இயலவில்லை. மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஜாமீன் உத்தரவுகள் சிறைகளுக்கு தாமதமாக அனுப்பப்படுகிறது.

மத்திய அரசு திட்டத்தை பின்பற்றி, ஏழை கைதிகளுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள், ஜாமீன் கிடைத்தவுடன் கைதிகள் விரைந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டப் பணிகள் ஆணைக்குழு எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட கைதிகள், ஜாமீன் கிடைத்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கைதிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவர்களை விடுதலை செய்ய என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்தும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல, அரசு உதவித்திட்டம் மூலம் பயனடைந்த கைதிகளின் விவரங்களை அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

The post ஜாமீன் பெற்றும் சிறையிலிருந்து வெளியில் வரமுடியாத கைதிகளை விரைந்து வெளியே அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும்: தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article