மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக, 10 விமானங்களின் புறப்பாடு மற்றும் 4 விமானங்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அவ்விமானங்களில் இருந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக காலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், பகலில் வெயிலில் அதிகரிப்பு என பருவநிலை மாறுபட்ட நிலையில் காணப்பட்டது. இந்த பனிமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு வார காலமாக காலை நேர விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தன. அதேபோல், சென்னை விமானநிலையத்தை சுற்றிலும் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவியது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக, இன்று காலை புறப்படும் சிங்கப்பூர், துபாய், பக்ரைன், அபுதாபி, மஸ்கட், கொல்கத்தா, சூரத், விஜயவாடா, புவனேஸ்வர், அந்தமான் ஆகிய 10 விமானங்களின் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. அதேபோல் மஸ்கட், கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்பட 4 இடங்களில் இருந்து சென்னை வரும் 4 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்களின் வருகை, புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டன. இவ்விமானங்கள் அனைத்தும் பனிமூட்டம் காரணமாக சுமார் ஒரு மணி வரை தாமதமாக இயக்கப்பட்டன.
இதையடுத்து, சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை வரும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடந்த ஒரு வார காலமாக குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனினும், இன்று சென்னைக்கு வரும் விமானங்கள், வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடும் அளவுக்கு பெரிதளவில் பனிமூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை விமானநிலையத்தில் பனிமூட்டம்; 14 விமானங்களின் வருகை புறப்பாட்டில் தாமதம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.