தேனி: பஞ்சமி நிலத்தை ஓ.பன்னீர்செல்வம் வாங்கியது தொடர்பாக மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணைய உத்தரவு நகல் வந்ததும் சம்பந்தப்பட்ட இடம் கள ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் பட்டாவாக மாற்றம் செய்த வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 1991-ல் தேனி மதுரை சாலையில் உள்ள ராஜாகளம் என்ற இடத்தில் 40 சென்ட் பஞ்சமி நிலத்தை மூக்கன் என்பவருக்கு தமிழக அரசு வழங்கியது. அரசிடம் இருந்து பஞ்சமி நிலத்தை பெறும் பட்டியலினத்தவர் 15 ஆண்டுகளுக்கு அந்த நிலத்தை வேறு யாருக்கும் உரிமை மாற்றம் செய்ய முடியாது என்பது விதி. அதன் பிறகும் நிலத்தை பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே விற்க முடியும்.