சென்னை-மதுரை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்

5 months ago 36

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மதுரைக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-671 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை திரும்பியது. முன்னெச்சரிக்கை சோதனைக்காக விமானம் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விமான நிலையத்தில் தயாராக இருந்த ஏர் இந்தியா ஊழியர்கள், இந்த அவசர தரையிறக்கத்தால் ஏற்பட்ட சிரமத்தைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இந்த எதிர்பாராத இடையூறு காரணமாக, எங்கள் பயணிகளை வேறு விமானத்தில் அழைத்துச் செல்வதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதே சமயம், பயணிகள் விரும்பினால் அவர்களது டிக்கெட் ரத்து செய்யப்பட்டு முழு தொகையும் திருப்பி வழங்கப்படும், அல்லது அவர்களது பயணத்தை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

Read Entire Article