
பெங்களூரு,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளன.
இதில் பெங்களூரு அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோவுடன் வரும் 27-ம் தேதி மோத உள்ளது. இதில் வெற்றி பெற்றால் டாப் 2 இடத்திற்குள் லீக் சுற்றை முடிக்க முடியும். இதனால் அந்த ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக பெங்களூரு அணியுடன் தோள்பட்டை காயத்திலிருந்து குணமடைந்த ஜோஷ் ஹேசில்வுட் இணைந்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் சண்டை காரணமாக ஐ.பி.எல். தொடர் நிறுத்தி வைக்கப்பட்ட சமயத்தில் தாயகம் திரும்பிய அவர் தோள்பட்டை காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். இதனால் அவர் ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டியில் பங்கேற்பாரா? என்ற கேள்வி நிலவியது.
தற்போது இந்த கேள்வி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் மீண்டும் இந்தியா திரும்பி பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளார். இவர் இல்லாமல் பந்துவீச்சில் சோடை போன பெங்களூரு தற்போது மீண்டும் வலுவடைந்துள்ளது.