சென்னை ஏர்போர்ட்டில் ரூ.1,207 கோடியில் 2ம் கட்ட விரிவாக்க பணிகள் விறுவிறு: அடுத்தாண்டு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு

2 hours ago 1

மீனம்பாக்கம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் சரக்கு விமானங்கள், தனி விமான போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு 2.2 கோடியாக இருந்த பயணிகள் எண்ணிக்கை, 2025ல் 3.5 கோடியை நெருங்கியது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதை கருத்தில் கொண்டு விமான நிலையத்தை விரிவுபடுத்த, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து, ஒன்றிய அரசின் அனுமதியை கடந்த 2017ம் ஆண்டு கோரியது. ஒன்றிய அரசும் அனுமதி அளித்ததோடு, சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மூலம் நிதியும் ஒதுக்கியது. அதன்படி ரூ.2,467 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் விரிவுபடுத்துவது என்றும், பேஸ் 1, பேஸ் 2 என இரு கட்டங்களாக கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதல் பேஸ் 1.36 லட்சம் சதுர மீட்டரில் ரூ.1,260 கோடியிலும், பேஸ் 2, ஒரு லட்சம் சதுர மீட்டரில் ரூ.1,207 கோடியில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இதையடுத்து அதிநவீன வசதிகளுடன் புதிய விமான நிலைய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2018, செப்டம்பர் மாதம் டெல்லியில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார். இதில் முதல் பேஸ் பணிகள் 2021ம் ஆண்டு நிறைவடைய வேண்டியவை. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமானது. 2023, ஏப்ரல் 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பிரதமர் மோடி, புதிய ஒருங்கிணைந்த முனையத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஏற்கனவே சர்வதேச முனையமாக செயல்பட்டு கொண்டிருந்த டெர்மினல் 3 கட்டிடங்கள், இடிக்கும் பணிகள் தொடங்கியது. அது நிறைவடைந்த பின்பு, பேஸ் 2 கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இது 2026, மார்ச் மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2ம் கட்ட புதிய முனையத்தில், 8 நுழைவு வாயில்கள், 60 செக் இன் கவுண்டர்கள், 10 எக்ஸ்ரே ஸ்கேனர்கள், 9 ரிமோட் போர்டிங் கேட்கள், 8 ஏரோபிரிட்ஜ்கள் உள்ளிட்ட வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வருகை பகுதியில் பயணிகளின் உடைமைகள் வரும் கன்வேயர் பெல்ட்கள் அதிநவீன முறையில் அமைக்கப்பட இருக்கின்றன. மேலும் அதிநவீன தானியங்கி ஸ்கேனர் வசதிகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் தற்போது பீக் அவர்ஸ் எனப்படும் நெரிசல் நேரங்களில், ஒரு மணி நேரத்திற்கு 12,000 பயணிகள், 24 அல்லது 25 விமானங்களில் வந்து செல்கின்றனர். இந்த புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. தற்போது ஆண்டுக்கு 3 கோடிக்கு மேல் பயணிகள் கையாளப்படுகின்றனர்.

இந்த புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, ஆண்டிற்கு 3.5 கோடிக்கு மேல் பயணிகளை கையாளும் விதத்தில் தரம் உயர்த்தப்படுகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் செயல்பாட்டிற்கு வந்த பின்பு சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான பயணிகள், எந்த கேட் வழியாகவும் உள்ளே வருவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும். இதனால் பயணிகள் பாதுகாப்பு சோதனை பகுதிகளில் நீண்ட நேரம் காத்திருப்பது குறைக்கப்படும். சென்னை விமான நிலையத்தில் தற்போது டெர்மினல் 1, 2, 4 ஆகிய முனையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு பின்பு புதிய டெர்மினல்-3 செயல்பாட்டிற்கு வந்த பின்பு 4 டெர்மினல்கள் செயல்படும்.

இதனால் பயணிகள் கையாளும் திறன் 3.5 கோடிக்கும் அதிகமாக இருக்கும். அதைப்போல் விமான எண்ணிக்கையும் 500க்கும் அதிகமாக இருக்கும். 3வது டெர்மினல் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, புதிய திட்டமாக 5வது புதிய டெர்மினல் சரக்கு போக்குவரத்தை முக்கியத்துவமாக வைத்து, அமைக்கும் திட்டமும், பரிசீலனையில் உள்ளது. அதற்கு தேவையான நிலங்கள் சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ளன. ஆனால் இந்த 5 டெர்மினல்களையும் உள்ளடக்கி காம்பவுண்ட் சுவர்கள் அமைப்பதற்கு சற்று கூடுதல் நிலம் தேவைப்படுகிறது. அதையும் தமிழ்நாடு அரசிடம் கேட்டு பெற இருக்கிறோம். புதிதாக அமைக்கப்படும் 5வது முனையம், சரக்கு விமான போக்குவரத்து மற்றும் சரக்குகளை கையாள்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

The post சென்னை ஏர்போர்ட்டில் ரூ.1,207 கோடியில் 2ம் கட்ட விரிவாக்க பணிகள் விறுவிறு: அடுத்தாண்டு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article