தர்மபுரி, ஏப்.9: தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் சென்னகேசவ பெருமாள் கோயிலில் ராம நவமி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயிலில், ராம நவமி திருவிழா, கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சத்தியநாராயணன், மச்ச அவதாரம், கஜேந்திர மோட்சம், சேஷ சயனம், வாமன அவதாரம், காளிங்க நர்த்தனம், பிருந்தாவனம், பார்த்தசாரதி ஆகிய அலங்கார சேவைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு நவமி அபிஷேகம், ராமர் அவதார அலங்கார சேவை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழாவின் முக்கிய நாளான நேற்று காலை, சென்னை கேசவ பெருமாள் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர், பெண்கள் மட்டும் நிலை பெயர்த்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். மாலையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடந்தது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) பல்லக்கு உற்சவமும், நாளை (வியாழக்கிழமை) சயன உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர்கள், ராமநவமி விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்துள்ளனர்.
The post சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.