‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி எதிரொலியாக, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, நெல்லூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு தினசரி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
வேலை, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொது மக்கள் தினமும் இந்த ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனைய வளாகத்தில் உள்ள பொதுத் தளத்தில் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. வெறும் 4 பெஞ்சுகள் மட்டுமே போடப்பட்டுள்ளதால், பயணிகள் தரையில் அமருகின்றனர். இதனால், ரயில் ஏற வரும் பயணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.