சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், கோவையில் தனியார் மதுபான ஆலை, கரூரில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு என 10 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில், செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.