சென்னை: காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, கரூர், நாகை, சிவகங்கை, தேனி ஆகிய 9 நகரங்களில் ரூ.72 கோடியில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, சமூகநலத் துறை சார்பில் 100 இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ, தொழிலாளர் நலத் துறை சார்பில் 100 ஆட்டோ, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் சுயஉதவி குழுவினருக்கு 50 மின் ஆட்டோ என 250 பெண்களுக்கு ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 1,000 சுயஉதவி குழுவினருக்கு பல்வேறு பயன்களை தரக்கூடிய அடையாள அட்டைகளையும் வழங்கினார்.