
கோவை,
கோவை மாவட்டம் சூலூரில் விமானப்படை தளம் உள்ளது. இங்கு தேஜாஸ் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த விமானப்படை தளத்தை சுற்றி சுவர் கட்டப்பட்டு, ஏராளமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் 24 மணி நேரமும் 2 அடுக்கு பாதுகாப்பு உள்ளது.
இந்த நிலையில் விமானப்படைதளத்தின் சுற்றுச்சுவரை தாண்டி நேற்றுமுன் தினம் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் உள்ளே புகுந்தார். இதை கவனித்த வீரர்கள் அந்த நபரை மடக்கி பிடித்தனர். விமானப்படை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது பெயர் சந்தீப் என்றும், சண்டிகரை சேர்ந்தவன் என்று கூறியதுடன், முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
இதனால் அந்த வாலிபரை விமானப்படை அதிகாரிகள், சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபருக்கு மனநலம் பாதிக்கப் பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. எனவே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.