
நாம் படிக்கும் அறிவியல் பாடங்களில், நம் அன்றாட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான அறிவியல் வேதியியலாகும். நம்மைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்விலும் வேதியியலின் தாக்கமும் மற்றும் அதன் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
குறிப்பாக, நாம் சுவாசிக்கும் காற்று, அருந்தும் நீர், உண்ணும் உணவு முதல், நாம் உடுத்தும் உடை, நாம் பயன்படுத்தும் அனைத்து வகையான பொருட்கள், நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் வரை என அனைத்திலும் வேதியியல் நிரம்பி உள்ளது. ஆகவே, இவை அனைத்தும் உருவாக காரணமானதும், ஆதாரமானதும் வேதியியலே.
தெளிவான வழிகாட்டி
இன்றைய சூழ்நிலையில், வேதியியல் பாடம் கடினமானது என்ற தவறான எண்ணத்தால் பல மாணவர்கள் அதை தவிர்க்கின்றனர். அதற்குப் பதிலாக, எந்த பாடப்பிரிவில் படித்தால் எளிதாக பட்டம் பெறலாம் என்று எண்ணி அதிக வேலைவாய்ப்பு இல்லாத பாடப்பிரிவுகளை தேர்வு செய்து, பின்னர் வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
ஆனால் உண்மையில், அபரிமிதமான வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடியது வேதியியல் படிப்பே. பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு எந்தப் படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கு, தெளிவான வழிகாட்டியாக விளங்கும் பாடப்பிரிவாகவே வேதியியல் உள்ளது.
ஒருபுறம், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பேராசிரியர் மற்றும் விஞ்ஞானி போன்ற உயரிய பதவிகளை வழங்கும் வேலைவாய்ப்புகள்; மறுபுறம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளில், வேதியியல் துறையை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நிலைகளில், மாதம் பல்லாயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை சம்பளத்திலுள்ள வேலைவாய்ப்புகள்.
சாதிக்க முடியும்
மாணவர்கள் முதலில், சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து, இளங்கலை மற்றும் முதுகலை வேதியியல் படிப்புகளை முடிக்க வேண்டும். அதன் பிறகு, தாம் விரும்பும் துறையில் பேராசிரியராகவோ, விஞ்ஞானியாகவோ, தொழில்முனைவோராகவோ, தொழிற்சாலையில் நிபுணராகவோ பிரகாசிக்க முடியும். இதற்காக, முதலில் தன்னிச்சையான இலக்கை அமைத்து, அதை நோக்கி கற்றால், நிச்சயமாக சாதிக்க முடியும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் தேசிய மற்றும் மாநிலத் தகுதித் தேர்வுகளில் (NET/SET) தேர்ச்சி பெறுவதன் மூலம், ஒருவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்ற முடியும். விஞ்ஞானியாக வரவேற்பளிக்கப்படும் நிலையை எட்ட விரும்பினால், மத்திய அரசின் தேசிய தகுதித் தேர்வில் (NET) தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்பை (Ph.D.) மேற்கொள்ளலாம். உதாரணமாக, இந்திய அறிவியல் கழகம் (IISc), இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IITs) போன்ற நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம். அதன் பின், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் விஞ்ஞானி அல்லது பேராசிரியராக, மாதம் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதேபோல், மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வான TRB (Teachers Recruitment Board) தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை வேதியியல் ஆசிரியராகவும் பணியாற்றலாம்.
ஆராய்ச்சி மற்றும் கல்வி துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
அரசுத் துறை வேலைவாய்ப்பு
இவை தவிர, மேலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் குறிப்பாக உணவுத்துறை, மருந்தியல் துறை, பெட்ரோலியத் துறை, ரயில்வே துறை, கனிமவளத்துறை மற்றும் தடயவியல் துறைகளில் வேதியியல் தொடர்பான பிரத்யேகமான பணியிடங்களை, மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலம் பெற முடியும்.
இது மட்டுமல்லாமல், மருந்து தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், சாயங்கள் மற்றும் வண்ணப்பூச்சுகள் தயாரிப்பு, ஆடைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிப்பு, காகிதம், பிளாஸ்டிக், பாலிமர், கனிம மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் என பல்வேறு தொழில்துறைகளிலும் வேதியியலாளர்களுக்கென தனிச்சிறப்பான வேலைவாய்ப்புகள் உள்ளன. இவை அனைத்திலும் மாதம் பல ஆயிரம் ரூபாயில் தொடங்கி அனுபவம் மற்றும் பதவிக்கேற்ப லட்சக்கணக்கான ரூபாயில் சம்பளங்கள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக மருந்துத் துறையில், புதிய மருந்துகளை ஆராய்ச்சி செய்வது, தற்போதுள்ள மருந்துகளின் உற்பத்தி முறைகளை மேம்படுத்துவது, தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விஷயங்களைக் கையாள்வது போன்ற பணிகளில் வேதியியலாளர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். உதாரணமாக, கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டதில் வேதியியலின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
வேலைவாய்ப்பு வழங்கும் துறைகள்
மேலும், கீழ்கண்ட துறைகளும் வேதியியலாளர்களுக்கான முக்கியமான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன:
பரிசோதனை ஆய்வகங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள், பரிசோதனைக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், பசுமை வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகள், நுண்ணிய வேதியியல் ஆய்வு நிறுவனங்கள், அணு மற்றும் ஒளியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு துறைகள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புகள். குறிப்பாக, தடயவியல் துறையில் குற்றங்களை ஆராய்வதற்கு வேதியியல் பகுப்பாய்வு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறாக வேதியியல் துறையில் உயர் கல்வி மற்றும் சிறந்த திறன்கள் உள்ளோர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு உயரிய நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற முடிகிறது.
ஆகவே, வேதியியல் என்பது ஒரு எல்லையற்ற துறை. பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பை வழங்குவதில் வேதியியல் படிப்பிற்கு நிகர் வேதியியலே. இது ஒரே நேரத்தில் மருத்துவம், தொழில், விவசாயம், சுற்றுச்சூழல், மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. இந்தத் துறையில் திறமை மற்றும் ஆர்வம் கொண்டவர்களுக்கு எதிர்காலம் வெற்றிகரமாக இருக்கும் என்பது உறுதி. மேலும் இது எண்ணற்ற வேலைவாய்ப்புகளுக்கான வாசலைத் திறக்கும் ஒரு திறவுகோல் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். ஒரு உயர் எதிர்காலத்தையும், உறுதியான வேலைவாய்ப்பையும் அளிக்கும் முக்கியமான படிப்பாகவும் வேதியியல் படிப்பு விளங்குகிறது. எனவே, மாணவர்கள் இந்தத் துறையை ஆர்வத்துடன் கற்றால், எதிர்காலம் சிறப்பானதாகவும், வளமானதாகவும் அமையும்.
-முனைவர். நா. முசாபர்கனி