சுவீடன்: துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி; அரை கம்பத்தில் கொடிகளை பறக்க விட உத்தரவு

4 hours ago 1

ஆரெபுரோ,

சுவீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் நகருக்கு மேற்கே கல்வி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்ற பெயரிடப்பட்ட அந்த பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

இதனால், மாணவர்கள் அனைவரும் நாலாபுறமும் தப்பியோடினர். இந்த தாக்குதலில், 10 பேர் பலியானார்கள். துப்பாக்கியால் சுட்ட நபரும் பின்னர் மரணம் அடைந்து பள்ளி வளாகத்திலேயே கிடந்துள்ளார். அவர் எப்படி பலியானார் என்ற விவரம் வெளிவரவில்லை. இந்த தாக்குதலுக்கான பின்னணி உள்ளிட்ட விவரமும் தெரிய வரவில்லை.

20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் படிக்க கூடிய இந்த கல்வி மையத்தில் கற்றல் குறைபாடுடையவர்கள் உள்ளிட்ட பலருக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு, நம்முடைய சமூகம் முழுமைக்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது என சுவீடனின் நீதி மந்திரி கன்னார் ஸ்டிராம்மர் கூறியுள்ளார்.

சுவீடனில் பள்ளிகளில் துப்பாக்கி சூடு நடத்தப்படுவது என்பது மிக அரிது. இந்த சம்பவம் தொடர்ச்சியாக, அரண்மனை மற்றும் அரசு கட்டிடங்களில் அரை கம்பத்தில் கொடிகளை பறக்க விடும்படி, அரசர் கார்ல் மற்றும் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் உத்தரவிட்டு உள்ளனர். இதுபற்றி வீடியோ பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

துப்பாக்கி சூடு நடத்தியவர் ஒரு மாணவரா? என்ற விவரமும் தெரிய வரவில்லை. எனினும், இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read Entire Article