கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்: மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

3 hours ago 1

மதுரை,

இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாளை (திங்கட்கிழமை) காலை 5.45 மணிக்கு மேல் 6.05 மணிக்குள் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ராமராயர் மண்டபத்திற்கு செல்லும் வழியிலும், ஏ.வி. மேம்பாலம், யானைக்கல் புதுப்பாலம் வழியாக எந்த வாகனத்திற்கும் அனுமதி கிடையாது. ஓபுளாபடித்துறை வைகை தென்கரை பகுதி மற்றும் வைகை வடகரை பகுதிகளில் கார் மற்றும் இதர வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. தென்பகுதியில் இருந்து எந்த வாகனமும் ஏ.வி.பாலம் மற்றும் செல்லூர் புதுப்பாலம் வழியாக வைகை வடகரை பகுதிக்கு வர அனுமதி இல்லை.

புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, அண்ணாநகர், கே.கே.நகர் மற்றும் நகரின் பிற பகுதிகளில் இருந்து வரும் கார் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களை, தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்த வேண்டும். அதன்படி, பச்சை நிற அனுமதி அட்டை பெற்றவர்கள், ஏ.வி. பாலம் தெற்கு பக்க நுழைவு வாயில் பகுதியிலும், ஊதா நிற அனுமதி அட்டை பெற்றவர்கள் அண்ணா பஸ் நிலையத்திலும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

பெரியார் பஸ் நிலைய சாலை

இதுபோல், புது நத்தம் ரோடு, அழகர்கோவில் சாலை, மேலூர் சாலையில் இருந்து கீழவாசல், சிம்மக்கல், ரேஸ்கோர்ஸ் ரோடு, நத்தம் ரோடு சந்திப்பு, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, மாவட்ட கோர்ட்டு, கே.கே.நகர் ஆர்ச், கே.கே.நகர் ரோடு, ஆவின் சந்திப்பு, அரவிந்த் மருத்துவமனை சந்திப்பு, குருவிக்காரன் சாலை, காமராஜர் சாலை, முனிச்சாலை சந்திப்பு, பழைய குயவர் பாளையம், செயின்ட் மேரிஸ் சந்திப்பு, தெற்குவெளி வீதி வழியாக செல்ல வேண்டும்.

பெரியார் பஸ் நிலையத்திலிருந்து புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு மற்றும் மேலூர் ரோட்டிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் கட்டபொம்மன் சிலை, தெற்குமாரட் வீதி, மகா ரோடு, கீழவாசல் சந்திப்பு, காமராஜர்சாலை, முனிச்சாலை, குருவிக்காரன் சாலை, அரவிந்த் மருத்துவமனை, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் ரோடு, மேலூர் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

தத்தனேரி ரோட்டில் இருந்து புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலூர் ரோட்டிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் எல்.ஐ.சி. சந்திப்பு, குலமங்கலம் ரோடு, செல்லூர் 60 அடி ரோடு, பி.டி. ராஜன் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

கள்ளழகரை எதிர் சேவையின் போது தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது 4 மற்றும் இருசக்கர வாகனங்களை, கோகலே ரோடு, திருமுக்குலம் ரோடு, கபார்கான் தெரு, லாலா லஜபதிராய் ரோடு, செவன்த்டே ஸ்கூல் மைதானம், அல்அமீன் பள்ளி வளாகம், அல்அமீன் பள்ளி மைதானம், எல்.பி.என். பள்ளி மைதானம், ஐ.டி.ஐ. மைதானம், புதூர் சேத்தனா பள்ளி மைதானம், ஓய்.எம். சி.ஏ. பள்ளி மைதானம், மேரியான் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் நிறுத்தி கொள்ள அனுமதிக்கப்படும்.

வாகனங்கள் நிறுத்த இடம்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது 4 மற்றும் இருசக்கர வாகனங்களை, காந்தி மியூசியம் மைதானம், டாக்டர் தங்கராஜ் சாலை, ரேஸ்கோர்ஸ் மைதானம், காமராஜர் பல்கலைக்கழக மைதானம், சாய்ராம் பள்ளி, பொதுப்பணித்துறை அலுவலகம், தமுக்கம் மைதான வாகன நிறுத்தம், வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி மற்றும் காமராஜர் சாலை ஆகிய இடங்கள் மற்றும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கொள்ள அனுமதிக்கப்படும்.

மேலும், நகருக்குள் கீழவெளி வீதியில் அம்சவள்ளி சந்திப்பு முதல் கீழவாசல் வரையிலும், கீழமாசி வீதியில் தேரடி முதல் விளக்குத்தூண் வரையிலும் வடக்கு மாசி வீதியிலும் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். அம்சவல்லி சந்திப்பிலிருந்து அண்ணாசிலை சந்திப்பு வரை அனுமதி சீட்டு உள்ள வாகனங்களை தவிர வேறு எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை.

அவுட் போஸ்ட் முதல் கோரிப்பாளையம் வரை, அண்ணா பஸ் நிலையம் முதல் கோரிப்பாளையம் வரை மற்றும் பாலம் ஸ்டேசன் ரோடு, கபடி ரவுண்டானா முதல் கோரிப்பாளையம் வரை எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read Entire Article