
சென்னை,
நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், 'ஜெகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றார். ஆனால் கடன் தொகையை திருப்பித் தராததால், கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக 'ஜெகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் பட உரிமைகளை வழங்காததால் சிவாஜி கணேசன் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'ஐகோர்ட்டு அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்ததற்கு வெகு காலம் முன்பே அந்த வீட்டை நடிகர் சிவாஜி கணேசன் நடிகர் பிரபுவுக்கு உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் பத்திரப் பதிவும் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும் துஷ்யந்தின் தந்தை ராம்குமார் அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அன்னை வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு தாக்கல் செய்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் எனவும் வில்லங்க பதிவில் கோர்ட்டு ஜப்தி உத்தரவை நீக்கவும் பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.