
புனே,
மராட்டியத்தின் போரிவலி நகரில் உள்ள பெஸ்ட் பணியாளர்களுக்கான குடியிருப்பில் அறைகளை ஒதுக்குவதில் ஒரு குடும்பத்தினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் சம்பந்தப்பட்ட 13 வயது சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி கும்பலாக நுழைந்த பெண்கள் சிலர், அந்த சிறுமியையும், தாயாரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அவர்களுடைய வீடுகளின் பின்புறத்தில் நாப்கின்கள், உள்ளாடைகளை சிறுமி போட்டுள்ளார் என்று எங்களுக்கு சந்தேகம் எழுகிறது என கோபத்துடன் கூறினர்.
அவர்கள் தாய், சேய் என இருவரையும் கடுமையாக திட்டியுள்ளனர். சிறுமியை சோதனை செய்கிறோம் என்று கூறி, கட்டாயப்படுத்தி, ஆடைகளை களைந்து, தகாத இடங்களில் தொட்டுள்ளனர். பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டனர்.
இதுபற்றிய விவரங்களை அந்த சிறுமியின் தாயார் புகாராக அளித்து, அதன்பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி சிறுமியின் தாயார் முன்பே போலீசில் புகார் அளித்து, அதனை வாபஸ் பெற்று விட்டார். கடந்த செவ்வாய் கிழமை மீண்டும் அவர் புகார் அளித்ததும், அவருடைய வாக்குமூலங்களை பெற்று கொண்ட போலீசார், பெண்கள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
எனினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், பெண்களின் நன்னடத்தையை சீர்குலைக்கும் வகையில் குற்ற செயலில் ஈடுபடுதல், ஆடைகளை களைதல், அத்துமீறி நுழைதல் மற்றும் போக்சோ சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய குற்றவியல் சட்டத்திற்கு உட்பட்டு வழக்கு பதிவாகி உள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.