
தர்மபுரி,
தர்மபுரியில் இன்று காலை 7 மணியளவில் இந்திய விமானப்படையின் விமானங்கள் தாழ்வான உயரத்தில் பறந்து சென்றன. சுமார் 4 மணி நேரமாக 2 விமானப்படை விமானங்கள் வானில் வட்டமடித்தபடி சுற்றி வந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்நிலையில், இது குறித்து தர்மபுரி மாவட்ட காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள விளக்கத்தில், இந்த விமானங்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அமைந்திருக்கும் எலங்கா விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக அனுப்பப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியின்போது பாதுகாப்பு கருதி கூடுதல் விமானத்தை அனுப்பும் வழக்கம் உள்ளதாகவும், இதன் காரணமாகவே தர்மபுரியில் 2 விமானப்படை விமானங்கள் பறந்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் தாழ்வான உயரத்தில் 2 விமானங்கள் பறந்து சென்ற சம்பவம் தர்மபுரி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.