
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு 10 மணி அளவில் முகேஷ், தீபன், இஸ்ஸாகின் ஆகிய மூவரும் நின்று பேசிக் கொண்டிருந்திருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் முகேஷ் (வயது 25) என்பவர் சுருண்டு விழுந்தார். மேலும் தீபன் என்பவரின் கைகள் சிதறின. மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த மூவரையும் மீட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முகேஷ் உயிரிழந்தார். மற்ற இரண்டு பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீபன் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கஞ்சா போதைக்கு அடிமையாவதை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தாலும், பழிக்குப்பழியாகவும் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இளைஞர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.