
கோவை,
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா வல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). இவர் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் தங்கி இருந்து காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் 17 வயது சிறுமி மற்றும் அவருடைய தோழியான 14 வயது சிறுமிக்கும் ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் தலைமறைவான மதபோதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜான் ஜெபராஜ் உறவினரான, கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த பெனட் ஹரீஸ் (32) என்பவரை கோவை மாநகர மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுமிகள் இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.