சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோவில்

6 days ago 6

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயன கோலம் என மூன்று வடிவங்களிலும் இங்கு பகவான் எழுந்தருளியிருக்கிறார்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு திப்பு சுல்தானின் நிதிப் பொறுப்பாளராக இருந்த ரங்கையா என்பவர், இந்தப் பகுதியில் வரி வசூலித்து திப்பு சுல்தானுக்கு கட்டி வந்தார். ஆனால் மூன்று ஆண்டுகளாக வசூலித்த வரிப் பணத்தை திப்பு சுல்தானுக்கு கொடுக்காமல், அதை வைத்து இங்குள்ள 108 கால் மண்டபத்தை கட்டியதாக வரலாறு கூறுகிறது. ராமானுஜரும், வேதாந்த தேசிகரும் மேல்கோட்டில் உள்ள திரு நாராயணபுரத்திற்குச் செல்லும் வழியில் சில நாட்கள் இங்கு தங்கியதாக சொல்லப்படுகிறது.

இந்தக் கோவில் மூன்று நிலை மற்றும் ஐந்து கலசங்கள் கொண்ட ராஜ கோபுரத்துடன், கண்களை கவரும் வண்ணம் அழகாக காட்சி தருகிறது. மேலும் உயரமான சுற்றுச் சுவர்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் பெரிய விசாலமான பரப்பைக் காணலாம். கோவிலை கடந்து உள்ளே சென்றவுடன் எதிரே 30 அடி உயரத்தில் செப்புக் கவசத்துடன் நீண்ட நெடிய கொடிக் கம்பம் ரம்யமாக காட்சி தருகிறது.

அதனை அடுத்து 108 கால் மண்டபம் அமைந்துள்ளது. அழகிய வேலைப்பாடுடன் கூடிய 108 கல் தூண்கள் வரிசையாக அழகாக காட்சி தருகின்றன. இந்த மண்டபத்தின் முகப்பில் ருக்மணி, சத்தியபாமா உடனாய குழல் ஏந்திய கிருஷ்ணனின் சுதை வடிவ சிற்பம் இருக்கிறது. கல் மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் வித்தியாசமாக கல்யாண விநாயகரை தனிச் சன்னிதியில் தரிசிக்கலாம். விநாயகர் சன்னிதிக்கு எதிரில் உள்ள தூணில் திப்புசுல்தானின் புடைப்பு சிற்பமும் இருக்கிறது.

கொங்கு நாட்டை திப்பு சுல்தான் ஆட்சி செய்த போது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதற்கு அடுத்ததாக 16 கரங்களுடன் நின்ற கோலத்தில் பெரிய திருமேனியுடன் சேவை சாதிக்கிறார், சுதர்சன ஆழ்வார். இவருக்கு சித்திரை நட்சத்திர நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. சுதர்சன ஆழ்வாருக்கு மறுபுறம், யோக நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு அடுத்ததாக விநய ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். கல்விக் கடவுளான ஹயக்ரீவர், ஆரோக்கியத்தை காக்கும் தன்வந்திரி பகவான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இவர்களை வணங்கி தாயாரான கல்யாண மகாலட்சுமியை தரிசிக்கிறோம். அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள தாயார், மேல் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய - வரத முத்திரையோடும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலையில் தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதோடு, விளக்கு பூஜையும் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக 9 வாரங்கள் இந்த விளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மூலஸ்தானத்தில் மூலவரை நோக்கி கூப்பிய கரத்துடன் கருடாழ்வார் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கருவறையில் புல்லாங்குழல் ஊதும் வேணுகோபாலனாக ஆனந்தமான முகத்துடன் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் கிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். இவரது சன்னிதிக்கு பின்புறம் ரங்கநாதர் சன்னிதி இருக்கிறது. அங்கு சிறிய மற்றும் அழகான வடிவத்தில் 'கஸ்தூரி ரங்கநாதர்' என்ற பெயரில் 7 தலை ஆதிசேஷனின் மேல் தூங்கும் புஜங்க சயன தோரணையில் அவர் உள்ளார். அவருக்கு இரு பக்கமும் நிலமகளும், திருமகளும் நின்றபடி இருக்கின்றனர். ரங்கநாதர் சன்னிதிக்கு முன்னால் பல நூற்றாண்டு பழமையான கல்வெட்டும் இருக்கிறது.

பிரகாரத்தை சுற்றி வரும்போது சிவபெருமான் கோவில்களில் உள்ளது போல, மகாலட்சுமியின் அம்சமான வில்வ மரத்தை காண முடிகிறது. அதற்கு கீழே நாகர் சன்னிதி, அதற்கு பக்கத்தில் காளிங்க நர்த்தனர் மற்றும் வாமன அவதார பெருமாள் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர். தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. அடுத்ததாக அமர்ந்த நிலையில் லட்சுமி நாராயணர் அருள்கிறார்.

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில், நின்ற கோலம், அமர்ந்த கோலம் மற்றும் சயன கோலத்தில் பகவான் எழுந்தருளியிருப்பதுபோல, இங்கும் மூன்று கோலங்களில் இருக்கும் பகவானை தரிசிக்கலாம். இந்த மூன்று மூலவர்களுக்கும் வழக்கமான அபிஷேகம் நடைபெறுகிறது.

மேலும் இங்கு ஆண்டாள் சன்னிதியும், ஐயப்பன் சன்னிதியும் உள்ளது. 108 கால் மண்டபத்தின் கடைசி கல் மண்டபத்தில், சிவலிங்கத்தின் புடைப்பு சிற்பம் காணப்படுகிறது. பெருமாள் கோவில்களில் சிவலிங்கத்தின் புடைப்பு சிற்பம் இருப்பது அரிதாக பார்க்கப்படுகிறது. இதேபோல கோவில் சுவர்களில் ஆங்காங்கே மீன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளதைப் போலவே, மோட்ச பல்லியின் சிற்பமும் இருக்கிறது. விஷ பூச்சியால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து மோட்சப் பல்லியை வணங்கிச் சென்றால், அந்த பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.

கோவிலுக்கு முன்பகுதியில் கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த ஆஞ்சநேயர் சிலை, 80 அடி உயரத்தில் பிரமாண்டமாக உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சங்கு, சக்கரத்துடன் இருப்பது விசேஷமானது. புரட்டாசி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும், ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்றும் இந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கோவிலுக்குள் 21 முக்கியமான பஞ்சலோக சிற்பங்கள் இருக்கின்றன.

வேணுகோபாலனுக்கு ஆவணியில் நடைபெறும் ஜெயந்தி உற்சவம், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம், புரட்டாசி பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம், மாசி மகம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, சிரவண தீபம் ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் விசேஷமான வழிபாடுகளாகும். இவ்வாலய இறைவனை வழிபாடு செய்தால், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.

Read Entire Article