சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே ஒரு கிலோ 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-பண்ணாரி சாலை கோம்புபள்ளம் பகுதியில் சத்தியமங்கலம் போலீசார் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராமபைலூர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (28), கொண்டப்பநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (28) என்பதும், இருவரும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சதீஷின் வீட்டிற்கு சென்ற போலீசார் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சோதனையிட்டபோது, விற்பனைக்காக 1.50 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா, கார் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போலீசார், 2 பேர் மீதும் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சத்தியமங்கலம் அருகே ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.