வீட்டுக்கு வீடு வாசப்படி’ அதேபோல் கணவன் மனைவி சண்டை இல்லாத குடும்பமே கிடையாது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவைதொடரக்கூடாது. கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் அது சில நிமிடங்கள்தான் நீடிக்க வேண்டும். அதைத் தாண்டி நீடிக்கும் சண்டை சமாதானமாகி யாராவது ஒருவர் முதலில் பேச ஆரம்பித்துவிட்டாலே போதும். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம். அதை விடுத்து கணவன் மனைவி சண்டையிட்டுக் கொண்டு வாரக் கணக்கிலும், மாதக்கணக்கிலும் ஏன் சிலர் வருடக் கணக்கிலும் முகம் கொடுத்துப் பேசாத தம்பதிகள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் வாழ்க்கையும், குழந்தைகள் வாழ்க்கையும் தான். ஏதோ காரணத்துக்காக சண்டையிட்டு விட்டோம் சரி, அடுத்தது என்ன செய்ய வேண்டும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி சமாதானமாக பேசி அதை சரிசெய்ய வேண்டும். எப்படி செய்வது
இதோ இல்லறம் நல்லறம் பேண 5 ஆலோசனைகள்:
* உணர்ச்சி வசப்படுவதை குறையுங்கள்: 24 மணி நேர கெடு என்பது ஒரு பயனுள்ள உத்தியாகும். இதில் இணையர்கள் இருவரின் மனமும் அமைதி கொள்ளும் வரை மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி விவாதிப்பதை ஒத்தி வையுங்கள். இதன் மூலம் இருவருக்கும் இடையே அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவும் செயலாக்கவும் போதுமான நேரம் கிடைக்கும். இதைப் பின்பற்றுவதன் மூலம் மோதல்கள் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கலாம். இது இணையர்களுக்குள் தெளிவான மனநிலையை ஏற்படுத்தி, பிரச்னையை புரிதலுடன் அணுக அனுமதித்து உணர்ச்சியின் தீவிரத்தைக் குறைக்கிறது.
* நல்ல வார்த்தையை பயன்படுத்துங்கள்: உங்கள் இணையருடன் சில குறிப்பிட்ட வார்த்தை அல்லது சமிக்ஞையை உருவாக்குவது மூலம் மோதல்களை திறம்பட நிர்வகிக்கலாம். இணையர்களில் ஒருவர் உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் போதோ அல்லது கலந்துரையாடலில் இருந்து சிறிது இடைவெளி வேண்டும் என நினைத்தாலோ, இது தெளிவான மற்றும் அர்த்தமுள்ள தகவல் தொடர்பு முறையாக இருக்கும். இதன் மூலம் அமைதியான மற்றும் தெளிவான கண்ணோட்டத்துடன் உரையாடலை தொடங்குவதற்கான நேரம் கிடைக்கும். இந்த அணுகுமுறையை பின்பற்றுவதால் இருவருக்கும் இடையிலான உறவில் பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலை வலுப்படுத்தமுடியும்.
*உடல் ரீதியான தொடுகை: மோதல்களின் போது உடல் ரீதியான தொடுதல் மூலம் இணையை கோபத்தின் உச்சத்தில் இருந்து இறக்கலாம். இந்தத் தொடுதல் ஒரு பாதுகாப்பையும், இணக்கத்தையும், நெருக்கத்தையும் தரும். மென்மையான தொடுதல்கள் அல்லது திடீர் அணைப்புகள் உடலில் ஆக்ஸிடோஸின் வெளியீட்டை அதிகப்படுத்துகின்றன. கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு மத்தியிலும்கூட, மன அழுத்தத்தைக் குறைப்பதிலும், உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை அதிகரிப்பதிலும் இந்த சிறப்பு ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது.
* வீடியோக்களை உருவாக்குதல் மற்றும் கடிதங்கள் எழுதுதல்: கொஞ்சம் பழைய பழக்கம் தான் ஆனால் ஒரு சில பழமையான பழக்கங்கள் தான் இன்றும் நம் அம்மா, அப்பா வரை சண்டையிட்டாலும் சேர்ந்தே இருக்க வழி செய்கின்றன. வீடியோக்களை உருவாக்கி காட்டுவது, கடிதங்கள் எழுதுவது போன்றவை வழக்கத்திற்கு மாறானதாக தெரியலாம். ஆனால் மோசமான உரையாடல்களின் போது குறிப்பாக சிக்கலான விஷயங்கள் பற்றி பேசும்போது, சிறந்த புரிதலையும் தெளிவையும் இது தருகிறது. உதாரணத்திற்கு ஒரு சொத்து வாங்கும் இடம் குறித்த விவாதங்களில் விளக்கப்படங்கள், வரை படங்கள் மற்றும் பிற காட்சிக் கருவிகளின் உதவியுடன் நம் மனதில் உள்ளவற்றை தெளிவாக எடுத்துரைக்க முடியும். இதேபோல் கடிதங்கள் எழுதுவது மூலம் மோதல்களின் போது தங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை கட்டுக்கோப்பாக மற்றும் சிந்தனைப்பூர்வமாக வெளிப்படுத்த முடியும்.
* எப்போதும் ‘நான்’ என்ற வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: மோதல்களின் போது ‘நீ’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘நான்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதால், நேர்மறையான, அமைதியான உணர்வை ஊக்குவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக, “நீ எப்போதும் என்னைக் கோபப்படுத்துகிறாய்” எனக் கூறுவதற்கு பதிலாக, “இதெல்லாம் நடப்பதை பார்த்து நான் சங்கடப்படுகிறேன்” என சொல்லிப் பாருங்கள். இப்போது உங்கள் இணையை குற்றம் கூறியது போல் இருக்காது. உங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தியது போலவே அமையும். இந்த அணுகுமுறை இருவருக்கும் இடையே உள்ள சிக்கலைத் தீர்க்கும் சூழலை வளர்க்கிறது. அங்கு இருவரும் தங்கள் பிரச்னை கேட்கப்பட்டதாகவும், மதிக்கப்படுவதாகவும் உணர்கிறார்கள். இறுதியில் இது அவர்களுக்கு இடையேயான பிணைப்பை எலுப்படுத்துகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விவாகரத்து, பிரிவுகள், காதல் முறிவுகள், மணமுறிவுகள் என அனைத்திற்கும் இந்த 5 விஷயங்கள் கடைப்பிடிக்காத காரணத்தால் தான் பல குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் தவிக்கின்றன. இதில் அதிகம் சங்கடங்களை அனுபவிப்பது வீட்டின் வயதானவர்களும், குழந்தைகளும்தான். உடல்ரீதியான தாக்குதல்கள், குடும்ப வன்முறைகள் காரணமாக பிரிவதில் நாம் கருத்தோ அல்லது கருணையோ எதிர்பார்க்கக்கூடாது. அதே சமயம் சின்ன கருத்து வேறுபாடு, புரிதலின்மையால் நடக்கும் பிரிவுகளை அற்புதமாக தவிர்க்கலாம். ஒருமுறை நாம் சேர்ந்து இல்லை என்றால் குழந்தைகள் மற்றும் நம்மைப் பெற்றோர்கள் எவ்விதமான சிக்கல்களை சந்திப்பார்கள் என யோசித்தாலே பாதி கோபங்கள் தீரும். மீதி நம் துணையிடம் இருக்கும் இரண்டு மைனஸ்களை பார்க்காமல் இருக்கும் 100 பிளஸ்களை பார்த்தால் குடும்பம் நிலைக்கும்.
– கவிதா பாலாஜிகணேஷ்
The post சண்டை சிறியது! சங்கடம் பெரியது!! வேண்டாமே மனமுறிவு!!! appeared first on Dinakaran.