
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு விடுவிக்க வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து, கோவில்பட்டி மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் இன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டு, கண்டன உரையாற்றினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் வீ.முருகேசன், தலைமைக் கழக பேச்சாளர் சரத் பாலா, மாவட்டத் துணைச் செயலாளர் ஏஞ்சலா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கோஷமிட்டனர்.