கோடையைப் போக்க குளுகுளு இயற்கை ஃபேஷியல்கள்!

4 hours ago 3

காய்கறி ஃபேஷியல்!

கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி, பூசணி இவற்றைச் சிறு துண்டுகள் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையுடன் பயத்தம் மாவைக் கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடம் கழித்துக் கழுவவும். முகம் சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் உள்ள பருக்களைப் போக்கி, மேடு பள்ளத்தை சரிசெய்யும். தோலுக்கு அதிக ஊட்டச்சத்தையும் நிறத்தையும் கொடுக்கிறது இந்த ஃபேஷியல்.

பழங்கள் ஃபேஷியல்
வாழைப்பழ ஃபேஷியல்

வாழைப் பழத்தை நன்கு மசித்து அத்துடன் தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும். வாழைப் பழ ஃபேஷியல் செய்வதால் அவை பாதிப்படைந்த சரும செல்களை சரி செய்யவும், முகப் பருக்களைப் போக்கவும், சருமத்தை இறுக்க மடையச்செய்யவும் பெரிதும் உதவியாக இருக்கும்.

மாம்பழ ஃபேஷியல்

மாம்பழத்தை மசித்து அதில் சிறிது பால் சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும். மாம்பழத்தை வைத்து ஃபேஷியல் செய்தால் சருமப் பிரச்னைகளை முதுமைத் தோற்றம், மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும். சருமம் இறுக்கமடைந்து, வறட்சி நீங்கி முகம் பொலிவோடு காணப்படும்.

ஸ்ட்ராபெர்ரி ஃபேஷியல்

ஸ்ட்ராபெர்ரியை தயிருடன் சேர்த்து கலந்து வாரத்திற்கு இரண்டு முறை முகத்திற்கு ஃபேஷியல் செய்யலாம். முகப் பருக்களை நீக்குவதற்கு ஸ்ட்ராபெர்ரி பெரிதும் துணையாக இருக்கும்.

ஆப்பிள் ஃபேஷியல்

ஆப்பிளை அரைத்து அதோடு தேன் சேர்த்துக் கலந்து முகத்தில் ஃபேஷியல் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். பழுப்பு நிற சருமம் மற்றும் பருக்கள் இருந்தால் அதனைச் சரிசெய்ய ஆப்பிள் ஃபேஷியல் சிறந்ததாகும்.

எலுமிச்சை ஃபேஷியல்

எலுமிச்சை அழகுப் பராமரிப்பில் பயன்படும் பொருள்களில் முக்கியமான ஒன்று. அதிலும் எலுமிச்சை ஒரு சிறந்த கிருமி நீக்கி பொருள். இதனை வைத்து முகத்திற்கு ஃபேஷியல் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, மாசுகள் நீங்கி பொலிவான சருமத்தை பெறமுடியும்.

மூலிகை ஃபேஷியல்

முல்தானி மட்டி, பயத்தம் மாவு, கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள், சந்தனத் தூள் இவற்றை சிறிது எடுத்து தேங்காய்ப் பால் விட்டு கலந்து முகத்துக்கு பேக் போடவும். 20 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். பிறகு கற்றாழை ஜெல்லில் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து முகத்தில் பூசிக் கழுவவும். இப்படி தினமும் செய்து கொள்ளலாம். குளிர்க்காலப் பாதிப்பில் இருந்து முகத்தைப் பாதுகாக்கும். சந்தனத்தூள் முகத்தில் இருக்கும் அழுக்கைப் போக்கும். கஸ்தூரி மஞ்சள், முல்தானி மட்டி முகத்தைப் பொலிவாக்கும். தேங்காய்ப் பால் சேர்ப்பதால் சருமத்தின் மிருதுத் தன்மை கூடும். முகத்தில் பருக்கள் இருந்தால் கொஞ்சம் வேப்பந்தளிரை அரைத்துச் சேர்த்து பேக் போடலாம்.

இளநீர் ஃபேஷியல்

சிலருக்கு 25 வயதிலேயே முகத்தில் சருமம் உலர்ந்து சுருங்கி விடும். அவர்கள் இளநீர் ஃபேஷியல் செய்வது நல்லது. இளநீரை பருத்திப் பஞ்சில் தொட்டு முகத்தின் எல்லாப் பக்கமும் நன்றாக துடைக்கவும். சருமத்தைச் சுத்த மாக்கி விடும். கடலை மாவு, மைதா மாவு இவற்றுடன் அரைத்து சந்தனம், தேன், இளநீர் கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்துக் கழுவவும். வெளிப்புறத் தூசுகளால் அழுக்குப் படிந்து கலையிழந்து மங்கிபோன முகம் அழகாக ஜொலிக்கும்.
– என். குப்பம்மாள்.

The post கோடையைப் போக்க குளுகுளு இயற்கை ஃபேஷியல்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article