ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. தற்போது இவ்வழக்கை ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் இதுவரை 245 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் விபத்தில் உயிரிழந்த வழக்கை விசாரித்த தனிப்படையை சேர்ந்த வேலுசாமி, விஜயகுமார் மற்றும் மகேஷ்குமார் ஆகிய 3 போலீசாருக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் இன்று (25ம் தேதி) கோவையில் உள்ள சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொடநாடு எஸ்டேட் அருகே வசித்து வரும் அதிமுகவை சேர்ந்த சங்கர் என்பவருக்கும், கொலை செய்யப்பட்ட ஓம் பகதூரின் உடலை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர் கபீருக்கும் வரும் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. கொடநாடு மேலாளர் நடராஜனிடம் மீண்டும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் சம்மன் வழங்கினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து விரைவில் அவருக்கும் சம்மன் வழங்கி நேரில் அழைத்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post கொடநாடு கொலை வழக்கு விசாரணை 3 போலீசார் இன்று ஆஜராக சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.