தேனி, ஜன. 11: தேனியில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான குறைதீர் முகாம் நேற்று நடந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-2025ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட அறிக்கையில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 27ம் தேதியன்று நடந்த கூட்டுறவுத் துறை மானியக்கோரிக்கையின் போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பணியாளர்கள் குறைகளை தீர்த்திடும் வகையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் தலைமையில் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க பணியாளர் குறைதீர் முகாம் தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இம்முகாமில் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளித்தனர். இம்முகாமில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், சரக துணைப்பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.