
சென்னை,
மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆந்திர துணை முதல்-மந்திரிபவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உட்பட ஏராளமானோர் மாநாட்டில் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் இந்து முன்னணியின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அந்த பெரியார், அண்ணா மற்றும் திராவிட சித்தாந்தம் குறித்து விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அதிமுக தலைவர்கள் முன்னிலையிலேயே அவர்களது கொள்கை தலைவர்களான பெரியார், அண்ணா குறித்து விமர்சன வீடியோ வெளியிடப்பட்டது, தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளானது. இந்த விவகாரத்தில் திமுகவினர் மிகக் கடுமையாக அதிமுகவை விமர்சனம் செய்தனர்.
இந்தநிலையில், தற்போதும் அண்ணா விவகாரம் விசுவரூபம் எடுத்திருக்கும் நிலையில், அண்ணாவைப் பற்றிப் பேசினால் கடந்தகாலத்தில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பேசி வருகின்றனர்.
இந்தநிலையில், 2026ல் எங்களுடைய ஆட்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும். அதிமுக - பாஜக கூட்டணியில் கனவிலும் பிரச்னை வராது. அதிமுக - பாஜக கூட்டணி உண்மையான கூட்டணி, வெல்லும் கூட்டணி என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடு அல்ல. இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட மாநாடு என்று கூறியது குறிப்பிடத்தக்கது.