
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தலைமையில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்போது அவர்கள் அனைவரும் "போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று கூறி உறுதிமொழி எடுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஏ.டி.எஸ்.பி.க்கள் ஆறுமுகம், தீபு உட்பட காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.