
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் தலைமையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வைத்து மாணவ மாணவிகளுடன் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக மாவட்ட எஸ்.பி. தலைமையில் காவல்துறையினர், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாவட்ட எஸ்.பி., மாணவ மாணவிகளிடம் போதை பொருட்களால் ஏற்படும் அபாயம் குறித்தும் போதைப் பொருட்களை தடுப்பது குறித்தும், இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் கல்வியை சிறப்பாக கற்று எதிர்காலத்தில் சமுதாயத்தில் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என்று எடுத்துரைத்து போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதனை தொடர்ந்து காமராஜ் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 450 பேர் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட எஸ்.பி. கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி காமராஜ் கல்லூரி முதல் தூத்துக்குடி பீங்கான் ஆபீஸ் ஜங்ஷன் வரை சென்று நிறைவு பெற்றது. இதில் போதை பொருள் தடுப்பு குறித்த பதாகைகளை ஏந்தி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குருவெங்கட்ராஜ் உட்பட காவல்துறையினர் மற்றும் காமராஜ் கல்லூரி முதல்வர் பானுமதி மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.