சென்னை: “முதலில் பாமகவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு, அதன்பிறகு வெற்றி தோல்வி குறித்து கருத்து சொல்ல வேண்டும். அவர்களுடைய குடும்பத்துக்குள்ளேயே வெட்டு, குத்து நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெற முடியும்?” என்று தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திரு வி.க.நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் பகுதிகளில், அமுத கரங்கள் நிகழ்ச்சிக்கு முன்பாக, அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில், மக்கள் குறைகளை கேட்கும் நிகழ்வினை தொடங்கியிருக்கிறோம். ஏற்கெனவே மேயர் தலைமையில் மக்களைத் தேடி மாநகராட்சி என்ற பெயரில் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்பாட்டினை இன்று முதல் துவங்கியிருக்கிறோம்.