சென்னை: சூப்பர்பெட் கிளாசிக் சர்வதேச செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் பெட் கிளாசிக் செஸ் போட்டி ருமேனியா நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா,பிரான்சின் மாக்சிம் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா பிரூஸ்ஜா ஆகியோருடன் சமநிலையில் இருந்தார். இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் 2 டை பிரேக்கர் போட்டிகள் சமனில் முடிவடைந்த நிலையில் 3-வது டை பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற பிரக்ஞானந்தாவுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய வாழ்த்து செய்தியில்; ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற சென்னையின் பெருமைக்குரிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். இது அவரது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டம். கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அவர் அசாதாரண திறமையை வெளிப்படுத்தினார். இந்திய சதுரங்கத்தின் இந்த தருணத்தை தமிழகம் கொண்டாடுகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post சூப்பர்பெட் கிளாசிக் சர்வதேச செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!! appeared first on Dinakaran.