![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/05/37723598-eps33.webp)
சென்னை,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த ஒரு மாதகாலமாக பள்ளி வராமல் இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில் மாணவி கர்ப்பம் அடைந்து கருக்கலைப்பு செய்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோரின் புகாரை அடுத்து அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மறுகூர் அனைத்து காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து 3 ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று பெண் பாதுகாப்பு மீதான பொறுப்புடன் நான் சுட்டிக்காட்டிய போது, "எடப்பாடி பழனிசாமி பீதியைக் கிளப்புகிறார்" என்று சொன்ன திமுக அரசின் அமைச்சர்கள், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அரசுப்பள்ளி மாணவிக்கு, தான் படிக்கும் பள்ளிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்பது வேலியே பயிரை மேய்கின்ற செயல், திமுக அரசே இக்கொடுரமானச் செயலுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும். கொஞ்சமேனும் மனசாட்சி இருப்பின், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று, பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய தனக்கு திராணியில்லை என்று பகிரங்கமாக அறிவித்து மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். போச்சம்பள்ளி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.