புதுச்சேரி, மார்ச் 4: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுடன் தொடர்புடைய கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் முக்கிய புள்ளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் பஞ்சாப் மற்றும் கோவையில் முகாமிட்டுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் அசோகன்(70). கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆன்லைனில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் வாக்குறுதியை நம்பி ₹98 லட்சத்தை முதலீடு செய்து, அந்த மோசடி கும்பலிடம் ஏமாந்தார். இதுகுறித்து சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அசோகன் அளித்த புகாரின்பேரில் சைபர் க்ரைம் போலீசார் மோசடி வழக்குபதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த நித்திஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40) ஆகிய 2 பேரை கடந்த மாதம் 26ம் தேதி கோவையில் கைது செய்து புதுவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2022ல் கோவையில் ஆஷ் பே எனும் பெயரில் நிறுவனம் தொடங்கி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடம் ₹60 கோடிக்கும் மேல் மோசடி நடந்திருப்பதும், இந்நிறுவனம் தொடர்பான விழாக்களில் பிரபல நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் பங்கேற்றதும், பணம் முதலீட்டாளர்களுக்கு கார்களை நடிகை பரிசளித்ததும் தெரியவந்தது. மேலும் இதற்காக நடிகைகளுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டது தெரியவந்த நிலையில் 2 நடிகைகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கான ஆவணங்களை திரட்டும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்நிறுவனத்தின் இயக்குனராக நித்திஷ்குமார் ஜெயின், உறுப்பினராக அரவிந்தகுமார் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் மோசடி செய்த பணத்தில் நட்சத்திர ஓட்டல்களில் அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த நிலையில்,. கோவையில் நட்சத்திர ஓட்டலில் அழகிகளுடன் இருந்தபோது புதுவை சைபர் க்ரைம் போலீசார் வசம் இருவரும் சிக்கியிருந்த நிலையில், ஆஷ் ேப நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக, பல்வேறு புகார்கள் அந்தந்த மாநில சைபர் க்ரைம் காவல் நிலையங்களில் தற்போது குவிந்து வருகின்றன. இதனால் இவ்வழக்கை அமலாக்கத் துறைக்கு மாற்றுவது தொடர்பாக புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டை உலுக்கிய இந்த பலே மோசடியில் தொடர்புள்ள கோவையைச் சேர்ந்த 10 பேர் மோசடி கும்பலை பிடிக்க எஸ்பி பாஸ்கரன் மேற்பார்வையில் சைபர் க்ரைம் பிரிவில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தனிப்படை புதுச்சேரியில் விசாரணை நடத்தி, ஏற்கனவே சிறையில் உள்ள 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளையும், நடிகைகளுக்கு சம்மன் அனுப்புவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக நீதிமன்றத்தில் ஓரிரு நாளில் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த மோசடியில் ₹50 கோடிக்கும் அதிகமாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்ட முக்கிய புள்ளி பஞ்சாப்பில் பதுங்கியிருப்பது தெரியவந்த நிலையில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான 4 பேர் கொண்ட தனிப்படை அங்கு முகாமிட்டுள்ளது.
அம்மாநில போலீசாரின் உதவியுடன் சில ஆவணங்களை திரட்டி தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்ஐ ராதாகிருஷ்ணன் தலைமையிலான மற்றொரு தனிப்படை, கோவையில் முகாமிட்டு தலைமறைவு முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதில் 3 பேரின் உறவினர்களை சுற்றிவளைத்த சைபர் க்ரைம் காவல் துறையினர், இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கிரிப்டோ கரன்சி மோசடியில் தொடர்புடைய, தலைமறைவு குற்றவாளிகளின் விவரங்கள் குறித்து அண்டை மாநில போலீசாருக்கும் (லுக்அவுட் நோட்டீஸ்) புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
The post கிரிப்டோ கரன்சி ேமாசடி வழக்கு முக்கிய புள்ளிகளை பிடிக்க பஞ்சாப், கோவையில் 2 தனிப்படைகள் முகாம் appeared first on Dinakaran.