
சென்னை,
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. இந்த படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இதையடுத்து சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை'இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்சன்ஸ், தி ஷோ பீபுள் மற்றும் ஜீ ஸ்டுடியோ ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க கூறப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் தொடங்க உள்ளதாக நடிகர் ஆர்யா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் படத்தை தயாரிக்க ரூ.80 கோடி செலவாகும் என்று கூறியுள்ளாராம். இதனால் படத்தைத் தயாரிக்க முதலீடு செய்ய வந்த முதலீட்டாளர்களில் ஒன்றான ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது பின் வாங்கிவிட்டதால் தற்போதைக்கு அந்த படம் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே படத்தை தயாரிக்க புதிய முதலீட்டாளர்கள் கிடைக்கும் வரை இப்படம் கிடப்பில் தான் இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
