கால்நடை வியாதிகளுக்கு மருந்து இறக்குமதி செய்ய ஆப்பிரிக்க நாட்டு ஏஜென்ட் உரிமம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.22.60 லட்சம் மோசடி

2 hours ago 3

சென்னை: கால்நடை வியாதிகளுக்கு மருந்து இறக்குமதி செய்ய ஆப்பிரிக்கா நாட்டு ஏஜெண்ட் உரிமம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.22.60 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த 2 பேரை சைபர் க்ரைம் போலீசார் தெலங்கானாவில் கைது செய்தனர்.

சென்னை சவுகார்பேட்டை நாராயண முதலி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் பி கவாட் (53). தொழிலதிபரான இவர், சங்கர்ஜி பிரித்விராஜ் மற்றும் சன்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த பிப்ரவரி 29ம் தேதி ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஹென்றி மென்சா என்பவர் தொடர்பு கொண்டு, மேற்கு ஆப்பிரிக்காவில் கால்நடைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான மருந்துவழங்கி வருகிறேன் என்று பேசியுள்ளார். இந்தியாவில் எனது நிறுவனத்தை நடத்த விரும்புகிறேன், அதற்கான இந்திய ஏஜென்டாக உங்களை நியமித்துள்ளேன் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். பிறகு டெல்லியில் இயங்கும் நிறுவனம் மூலம் டாக்டர் முகமது ஐசாகா என்பவரிடம் 150 லிட்டர் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அதை நம்பி 30 லிட்டர் மருந்துக்கு முதற்கட்டமாக ரூ.22.60 லட்சம் பணத்தை 9 தவணைகளாக சுரேஷ்குமார் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கொரியர் மூலம் 8 லிட்டர் மருந்து மட்டும் அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் அது கோமியம் என அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதன் பிறகு ஆப்பிரிக்கா நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனை தொடர்ந்து சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் மனோகருக்கு உத்தரவிட்டார்.

வடக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்திய போது, தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டம் மல்லாரம் பகுதியை சேர்ந்த அஜ்மீரா சுதாகர்(31) மற்றும் ஆந்திரா மாநிலம் பாலநாடு மாவட்டம் மார்கபூர் பகுதியை சேர்ந்த யரகோர்லா னு(எ)அகில்(32) ஆகியோர் இணைந்து தொழிலதிபரை ஏமாற்றி பணம் பறித்தது உறுதியானது. இதைதொடர்ந்து தனிப்படை போலீசார் தெலங்கானா மற்றும் ஆந்திரா சென்று 2 குற்றவாளிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post கால்நடை வியாதிகளுக்கு மருந்து இறக்குமதி செய்ய ஆப்பிரிக்க நாட்டு ஏஜென்ட் உரிமம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.22.60 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article