காரைக்குடி அருகே அரசு பஸ்-வேன் மோதல் 3 லோடுமேன்கள் சாவு: 20 பேர் படுகாயம்

1 week ago 5

காரைக்குடி: காரைக்குடி அருகே அரசு பஸ், பால் வேன் மோதிய விபத்தில் 3 லோடுமேன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது. இதில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை 1 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பஸ் நிலையத்திற்கு வந்த அரசு பஸ் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. காரைக்குடி, செஞ்சை தேனாற்று பாலம் அருகே பஸ் சென்றபோது, எதிரே ஈரோட்டில் இருந்து திருப்புத்தூர் வழியாக காரைக்குடி வந்த பால் வேன் மோதியது. இதில் வேனின் முன்பகுதி மற்றும் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

வேனில் இருந்த பால் இறக்கும் லோடுமேன்களான திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு ஆறுமுகம் (52), சாணார்பட்டி கர்ணன் (31), தமிழ்பாண்டி (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் டிரைவர் ரூபன் (22) கால் துண்டிக்கப்பட்டது. பஸ் கண்டக்டர் செல்வேந்திர பிரசாத், டிரைவர் நாகராஜன் மற்றும் பயணிகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேன் டிரைவர் ரூபன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

* கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து பெண் பலி: 20 பேர் படுகாயம்

மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் சையது (45). இவர் தனது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு முன் சுற்றுலா வேனில் கொடைக்கானல் சென்றார். அங்கு சுற்றுலாத்தலங்களை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு மதுரைக்கு புறப்பட்டு வந்தனர். வேனை விளாச்சேரியைச் சேர்ந்த மொக்கைச்சாமி (45) ஓட்டினார். இரவு 10 மணியளவில் தேவதானப்பட்டி காட்ரோடு அருகே, டம்டம் பாறை மலைப்பாதையில் வேன் வந்தபோது, எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பியுள்ளார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மொக்கைச்சாமி, வேனில் இருந்த சையது, அவரது உறவினர்கள் உள்பட 21 பேர் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜின்னத்பேகம் என்பவர் உயிரிழந்தார். விபத்து காரணமாக கொடைக்கானல் மலைச்சாலையில் சுமார் 30 நிமிடம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post காரைக்குடி அருகே அரசு பஸ்-வேன் மோதல் 3 லோடுமேன்கள் சாவு: 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article