கரூர், ஜன. 31: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இந்திய அரசியல் அமைப்பின்பால் இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன், குடிமகள் ஆகிய நான், நமது அரசியல் அமைப்பின்படி தீண்டாமை ஒழி க்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாக கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.
அரசியல் அமைப்பின் அடிப்படை கருத்திற்கு ஏற்ப, சமய வேறுபாடற்ற சுதந்திர சமூதாயத்தை உருவாக்குவதில், நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியல் அமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றுக்கு இது என்றென்றும் எடுத்துக் காட்டாக விளங்கும் என்றும், இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, தனித்துணை ஆட்சியர் பிரகாசம், தமிழ் வளர்ச்சித்தறை உதவி ஜோதி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தாசில்தார் நேரு உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
The post கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.