
லக்னோ,
டெல்லியை சேர்ந்தவர் 35 வயது பெண் ஒருவர் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கணவரின் உறவினர் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் ஏர் கண்டிஷனர் மற்றும் குளிர்சாதன பெட்டி பழுதுபார்க்கும் தொழிலை கற்றுக்கொள்ள டெல்லியை சேர்ந்த பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவனுக்கு அந்த பெண் அத்தை முறை ஆவார்.
இதனையடுத்து காலப்போக்கில் கணவரை இழந்து வாடும் அத்தைக்கு சிறுவனுடன் நெருக்கம் ஏற்பட்டது. இவருக்கும் இவரது மருமகனுக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுவன் சொந்த ஊரான மீரட்டிற்கு வந்தார். அவரது குடும்பத்தினர் சிறுவனின் நடத்தை மாற்றங்களைக் கவனித்தனர். அவனைத் திருப்பி அத்தையுடன் அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்தனர்.
இந்த நிலையில் பிரிவால் வருத்தமடைந்த அந்தப் பெண், சிறுவனின் வீட்டிற்குச் சென்று, காவல்துறை மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில், "அவர் இனி என் மருமகன் அல்ல, அவர் என் கணவர், நான் அவருடன் வாழ்வேன்" என்று கூறினார். இந்த அறிவிப்பால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மீரட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், சிறுவனுக்கு சுமார் 16 வயது என்பதால், இந்திய சட்டத்தின் கீழ் அவர் சட்டப்படி மைனர் என்றும், அந்தப் பெண் கடுமையான சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினர், தாங்கள் ஒரு சகோதரியாக நடத்திய பெண் இப்படி நடந்து கொள்வாள் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளனர்.