'ஹனி டிராப்' வலையில் வீழ்ந்து பாகிஸ்தானுக்கு உளவு கூறிய ராணுவ என்ஜினீயர் கைது

23 hours ago 3

மும்பை,

மும்பையை அடுத்த கல்வாவை சேர்ந்தவர் ரவீந்திர முரளிதர் வர்மா(வயது27). ராணுவ தொழில்நட்ப நிறுவனம் ஒன்றில் ஜூனியர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு தெற்கு மும்பையில் உள்ள கடற்படை கப்பல் துறைக்குள் நுழைய அனுமதி இருந்தது. மேலும் அவர் கடற்படை கப்பல்களில் பணிபுரிந்துள்ளார்.

இந்தநிலையில் பாகிஸ்தான் உளவுத்துறை அவரை நோட்டமிட்டது. அவர் மூலம் முக்கிய தகவல்களை கறக்க முடியுமா? என்று சதித்திட்டம் தீட்டியது. அதற்காக பாகிஸ்தான் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் அவரிடம் பேஸ்புக் வலைதளம் மூலம் பெண்ணை போன்று பேச்சு கொடுத்தனர்.

அவர்கள் விரித்த "ஹனி டிராப்" வலையில் முரளிதர் வர்மா வசமாக சிக்கிக்கொண்டார். பெண் என நினைத்து பாகிஸ்தான் உளவுத்துறையிடம் வழிந்த அவர், கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் முதல் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு முக்கியமான தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் கசியவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்த ரகசிய தகவல் தானே பயங்கரவாத தடுப்பு படையினருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில், பயங்கரவாத தடுப்பு படை அதிகாரிகள் நேற்று முன்தினம் முரளிதர் வர்மாவை பிடித்தனர். விசாரணைக்கு பிறகு, முரளிதர் வர்மா தவறு செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பயங்கரவாத தடுப்பு படையினர் அவரை நேற்று கைது செய்தனர்.

சமூக ஊடகத்தளம் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ள பயன்படுத்தப்பட்ட அவரது செல்போன்கள் உள்ளிட்ட சாதனங்களை பயங்கரவாத தடுப்பு படையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Read Entire Article